கண்ணுக்கு இமை போல் பெண்ணுக்கு ஹிஜாப்.
இமைகளை இறைவன் படைத்திருப்பது கண்-களைச் சிறைப் படுத்தவோ சிதைக்கவோ அல்ல. கண்களின் பாதுகாப்புக்குத்தான்.
அதுபோல பெண்களுக்கு ஹிஜாபை இறைவன் கடமையாக்கியது அவளை அடிமைப்படுத்தவோ சிறுமைப்படுத்தவோ அல்ல. அவளுடைய கண்ணியத்தைக் காப்பதற்குத்தான்.
இன்று நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைத் தாக்குதல்கள் பெருகி வருகின்றன. இதற்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பது பெண்களின் அலங்கோல அரைகுறை ஆடைகள்தான்.
‘ஆள் பாதி ஆடை பாதி’ என்னும் பழமொழியைப் பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்களோ என்று பயமாக இருக்கிறது. ஒருவர் வாழ்வில் முன்னேற நல்ல ஆளுமைப் பண்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டோ அதே அளவு முக்கியத்துவம் அவர் உடுத்தும் கண்ணியமான ஆடைக்கும் உண்டு என்பதுதான் அதன் பொருள்.
ஆனால் இன்றைக்குப் ‘பாதி ஆடை போதும்’ என்று நவநாகரிக நங்கையர் நினைத்துவிட்டார்களோ என்னவோ, அரைகுறை ஆடைகள் உடுத்தி ஆபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.
பெண்கள் எந்தத் தொல்லைக்கும் ஆளாகக்கூடாது எனும் உயர்நோக்கத்துடன் இஸ்லாமியத் திருநெறி பெண்களுக்குப் பர்தாவைக் கடமையாக்கியுள்ளது. அதையொட்டிய அருமையான வழிகாட்டுதல்கள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
ஹிஜாப் என்பது என்ன, உடையில் மட்டும்தான் ஹிஜாபா, அதன் சட்ட திட்டங்கள் என்ன, நபித்தோழியர்கள் ஹிஜாபுக்குத் தந்த முக்கியத்துவம் என்ன, முகத்திரை அவசியமா, நபிகளாரின் காலத்தில் பெண்கள் முகத்தை மறைத்தார்களா முதலிய பலவகையான வினாக்களுக்கு இந்தச் சிறுநூல் மிகத் தெளிவாக விடை அளிக்கிறது.
பர்தா பற்றி அலட்சியமாக இருக்கும் சகோதரிகள்கூட இந்த நூலைப் படித்தால் நிச்சயம் ஹிஜாபைப் பேணத் தொடங்கிவிடுவர். மறுமையில் நபிகளாரின் பரிந்துரை கிடைக்க வேண்டும் எனில் பர்தா எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதைப் படிக்கும்போது உடல் சிலிர்க்கிறது. இதுபோன்ற பல நிகழ்வுகளை இதயத்தைத் தொடும் வகையில் மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள் இந்த நூலில் தொகுத்தளித்துள்ளார்.
முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி, தமிழ் அறிந்த ஒவ்வொரு பெண்ணும் இதைப் படிக்கவேண்டும். அதுமட்டுமன்று, பாலியல் கொடுமைகளையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் எதிர்த்துப் போராடும் மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரின் கைகளிலும் இந்த நூல் சென்று சேரவேண்டும் என்பது எங்கள் பேரவா.
No comments:
Post a Comment