Pages

Showing posts with label பஷீர் அஹம்மத். Show all posts
Showing posts with label பஷீர் அஹம்மத். Show all posts

Sunday, August 22, 2010

தேன் கூடும் திருமறைக் கூற்றும் !!!!

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
தேனீக்களின் வாழ்க்கை முறையில் நடைபெறும் மேலும் பல அற்புதங்களைக் காண்போம்.
இன்று நிலத்தடி நீர் மிக மிக அரிதாகி விட்டது. காரணம் மணல் கொள்ளை! ஆற்றுப் படுகையில் இருக்கும் அடுக்கடுக்கான மணல் தட்டுக்கள் தான் நிலத்தடி நீரின் பிடிமானங்களாக இருக்கின்றன. ஆற்றுப்படுகையில் நடக்கும் அபரிமிதமான, அளவுக்கதிகமான மணல் கொள்ளையின் காரணமாக அந்த மணற் தட்டுக்கள் பறி போய் நிலத்தடி நீர் சேமிப்பாகவில்லை.
கொள்ளையடிக்கப்படும் மணல் எங்கு செல்கின்றது? மனிதர்கள் கட்டுகின்ற மாளிகைகளுக்கு! அறிவியல் விலங்கான மனிதன் ஒரு வீட்டைக் கட்டுகின்ற போது, இன்னொரு வளத்தை அழித்து, தன்னுடைய வீட்டைக் கட்டிக் கொள்கின்றான்.
பறவைகள் சில குச்சிகளை வைத்துக் கட்டுகின்றன. எறும்பு, கரையான் போன்றவை மண்ணை வைத்து வீட்டை அமைத்துக் கொள்கின்றன. இவையெல்லாம் கூடு கட்டுகையில் தங்கள் இனத்திற்கும், மற்றவர்களுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீட்டுக்காக மனித இனத்திற்கும், அடுத்த இனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றான்.
ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பின் அற்புதமான இந்தத் தேனீ, யாருக்கும் எதற்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தன் மெழுகுக் கூட்டிற்கான மூலத்தை எப்படிப் பெற்றது? யார் கொடுத்தது? தேனீக்களில் பாட்டாளித் தேனீ, ஆண் தேனீ, ராணித் தேனீ என்று மூன்று வகைகள் உள்ளன. இதில் இளைய பாட்டாளித் தேனீ அல்லது பணியாளர் தேனீ தங்களின் அடிவயிற்றுக் கிடங்கில் அமையப் பெற்றிருக்கும் மெழுகுச் சுரப்பிகளில் இருந்து மெழுகைச் சுரக்கின்றன. இவ்வாறு சுரக்கப்பட்ட மெழுகை, தேனீக்கள் மென்று குழைத்து இந்தத் தேனடையை உருவாக்குகின்றன.
மென்று, குழைத்து, கட்டப்படுகின்ற தேன் கூட்டின் விதவிதமான அறைகளின் சுவர்கள் நன்கு காய்ந்து கனமாகி விடுகின்றன. ஆனால் அதே சமயம், 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் நெகிழ்ச்சியடையும் நிலையையும், 145 டிகிரி அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் உருகும் நிலையையும் அடைந்து விடுகின்றன.
இங்கு தான், கூடுகளைக் கட்டிக் கொள் (16:68) என்று அல்லாஹ் குறிப்பிடும் கட்டளையைச் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
மனிதன் தான் கட்டும் வீட்டிற்காக பெரிய சிமெண்ட் கிடங்கை வெளியில் வைத்திருக்கின்றான். கட்டடத்திற்கு சிமெண்ட் மட்டும் போதாது. ஜல்லி, இரும்பு, செங்கல், மணல், தண்ணீர் என பல மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன.
குறிப்பாக வீட்டுச் சுவர்களைக் கட்டும் போது, சுடப்பட்ட செங்கல்களை அடுக்கி வைத்துக் கொண்டு அதன் மீது முகட்டைப் போட்டு விட முடியாது. அந்தச் செங்கல்களில் ஏற்படும் இடைவெளிகள் அடைக்கப்பட வேண்டும். செங்கல்களில் ஏற்படும் இடைவெளிகளை அடைப்பதற்கு சிமெண்ட் சாந்துகளைப் பயன் படுத்துகின்றோம். மனிதனுக்கு மட்டும் தான் இந்த அறிவுத் திறன் இருக்கிறதா? என்று பார்த்தால் அல்லாஹ்வின் அற்பப் படைப்பான, அதே சமயம் அற்புதப் படைப்பான இந்தத் தேனீக்கு மனிதனை விஞ்சுகின்ற அறிவுத் திறன் இருக்கின்றது.
இந்தச் சின்னஞ்சிறு தேனீ பல்வேறு மரப்பட்டைகள், மலர் அரும்புகளில் இருந்து செந்நிறத்துப் பிசினைச் சுமந்து கொண்டு வந்து தேன் கூட்டில் உள்ள கீறல்களை, இடைவெளிகளை அடைக்கின்றன. அதில் உள்ள பாந்துகளை இந்தப் பிசின் சாந்துகளை வைத்துச் சரி செய்து கொள்கின்றன.
மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீடுகளுக்கு அழகிய வண்ணம் (பெயிண்ட்) தீட்டுகின்றான் என்று எண்ணி விடக் கூடாது. அல்லாஹ்வின் இந்தச் சிறிய படைப்பும் தான் கட்டும் வீட்டிற்கு செந்நிறப் பிசினைக் கொண்டு வண்ணம் தீட்டிக் கொள்கின்றது. இதனால் அந்தத் தேன் கூட்டில் ஒரு பளபளப்பு பளிச்சிடுகின்றது.
இவ்வாறு இந்தச் சின்னஞ்சிறு அரிய படைப்பின் அடிவயிற்றுக் கிடங்கிலிருந்து கிடைக்கின்ற மெழுகின் மூலம் எழுகின்ற மெழுகு மாளிகையான தேன் கூடு, அந்தத் தேனீக்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கும் சேர்த்தே பயன்படுகிறது.
இருட்டில் வாழும் இந்தக் குருட்டு மனிதனுக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியாகவும், அழகு சாதனங்களுக்கும் அவனது வீட்டில் அலங்கரிக்கும் மரச் சாமான்களுக்கும் மெருகூட்டும் வண்ணக் கலவை யாகவும் அது பயனளிக்கின்றது.
மனிதன் இயற்கை வளத்தைச் சுரண்டியும், அடுத்தவரின் அல்லது அடுத்த பிராணியின் சொத்தைச் சூறையாடியும் தன் வீட்டைக் கட்டிக் கொள்கின்றான். ஆனால் இந்தத் தேனீயோ தன் சொந்தக் காலில் நின்று, சொந்த மூலத்தைக் கொண்டே தன் கூட்டைக் கட்டிக் கொள்கின்றது.
தாவர இனத்தில் போய் தேனீ சில சேர்மானங்களைப் பெறுகின்றது. அவ்வாறு தாவர வர்க்கத்திலிருந்து அந்தச் சேர்மானங்களைத் தானமாகப் பெற்றுவிடவில்லை. அதற்குப் பரிகாரமாக அந்தத் தாவரத்தின் மலர்ச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் மகரந்தச் சேர்க்கையைக் காணிக்கை யாகக் கொடுத்து விடுகின்றது.
சிலந்தியும் தன் சொந்தக் காலில் நின்று, தன் உடலிலிருந்து
உருவாகும் திரவத்திலிருந்து இழைகளைப் பின்னி வலையை அமைத்துக் கொள்கின்றது. ஆனால் அதனால் மனித சமுதாயத்திற்கு எவ்விதப் பயனும் இல்லை. மேலும் அது மனிதனுக்கு இடர் விளைவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தேனீயும், தேன் கூடும் மனித சமுதாயத்திற்கு மாபெரும் பலனை அளித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த வகையில் “கூடு கட்டுக” என்று தேனீயை நோக்கி அல்லாஹ் கூறும் கூற்று வெறும் கூற்றாக இல்லை. மனிதனின் அறிவுக் கண்ணைத் திறக்கின்ற, சிந்தனை ஊற்றாக அமைந்துள்ளது.
என் கூட்டைக் கட்டுவதற்காக மெழுகு எனும் மூலத்தை என்னுள் சுரக்க வைத்தவன் தன்னிகரில்லா என்னிறைவன் என்று அல்லாஹ்வின் படைப்பாற்றலுக்கு சாட்சி கூறி நிற்கின்றன, இந்தத் தேனீக்கள்!
அதிசயப் புதையல்! அதிரசப் படையல்
தேன் கூடு என்பது இன்ன பிற பொடிப் பொடி ஈக்கள், பெரும் பெரும் பறவைகள் கட்டுகின்ற கூடுகள் போன்றதல்ல! அல்லாஹ்வின் அற்புதங்களைச் சுமந்து நிற்கும் அதிசயப் புதையலாகும்; அதிரசப் படையலாகும். தேன் கூடு என்பது தேனீக்கள் வசிக்கின்ற ஒரு வீடு மட்டுமல்ல!
பூக்கள் சுரக்கின்ற இன்சுவை மதுர பானம் (சங்ஸ்ரீற்ஹழ்), மகரந்தத் தூள் ஆகியவை தேனீயின் வயிற்றில் போய் செரிமானம் ஆகி வயிற்றின் வழியாக வெளியேறும் அமிர்த பானமான தேனைக் காக்கின்ற, செயல் நுணுக்கம் தாங்கிய சேமிப்பு வங்கி தான் தேன் கூடு! பாலினச் சேர்க்கைக்குரிய பள்ளியறை! தேனீக்கள் பொறிக்கின்ற சினை முட்டைகளையும் அந்தச் சினை முட்டைகள் ஈனுகின்ற குஞ்சுகளையும் காக்கின்ற கரு என தேன் கூட்டின் பன்பமுகப் பயன்பாட்டைப் பட்டியல் போடலாம்.
தொங்கும் தொழில் நுட்பத் தொழிற்சாலை
மரக் கிளைக்கு இடையிடையே அந்தரத்தில் தொங்கும் இந்தத் தேன் கூடு வெறும் தேன் கூடல்ல! தொங்கும் தொழில் நுட்பத் தொழிற்சாலை! அமுதம் சுரக்கும் அதி மதுரத் தேன் ஆலை! இங்கு இருபத்தி நான்கு மணி நேரமும் தொழில், பணி நடந்து கொண்டே இருக்கின்றது.
திட்டமிடப்பட்ட தேன் கூட்டு அறைகள்
தேனீயின் பணிகளுக்குத் தக்க தேன் கூட்டில் திட்டமிடப்பட்டு அறைகள் அமைக்கப்படுகின்றன. தேன் கூட்டில் ஒரு பகுதி வளரும் ஆண் தேனீக்களுக்காகவும், தேன் மற்றும் மகரந்தத் தூளை சேமிப்பதற்காகவும் கட்டப்படுகின்றது.
ஆண் தேனீக்களுக்காகக் கட்டப்படும் அறைகள்
பணியாளர்களுக்காகக் கட்டப்படும் அறைகளை விடப் பெரிதாக அமைக்கப்படுகின்றன. இந்த அறைகள் மூடப்பட்டு விட்டால் ஒரு குவிமாடத்தை (உர்ம்ங்) போல் காட்சி அளிக்கும். பாட்டாளித் தேனீக்களின் அறைகள் மூடப்பட்டு விட்டால் தரை மட்டமாகக் காட்சியளிக்கும்.
ஆண் தேனீக்களின் அறைகள் தேன் கூட்டின் நடுவிலும் கீழ்ப் பகுதியின் வலது புறத்திலும் கட்டப்படுகின்றன. பாட்டாளித் தேனீக்களின் அறைகள் தேன் கூட்டின் மேற்பகுதியில் இடது புறத்தில் கட்டப்படுகின்றன.
ராணித் தேனீக்களின் அறைகள்
தேன் கூட்டின் முகத்தில் நேராக, அதே சமயம் பாட்டாளித் தேனீக்களின் அறைகளுக்கு எதிராக, செங்குத்தாக ஓர் அறை தொங்கும். இது தான் ராணித் தேனீயின் அறையாகும்.
படுக்கை விட்டத்தில் அமைந்துள்ள அறைகள் பாட்டாளி அல்லது ஆண் தேனீக்களின் அறைகளாகும்.
குஞ்சுகளுக்குரிய அறை
குஞ்சுகள் அல்லது முட்டை அல்லது முட்டைப் புழுக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட அறையில் தான் இளம் ராணி பருவம் அடைவதற்காக வளர்க்கப்படுகின்றது. ராணித் தேனீயின் இந்த அறை சாதாரண முட்டைப் புழுக்களுக்கான அறையை விட அகலமானது.
இவ்வாறு ராணீத் தேனீக்கள், ஆண் தேனீக்கள், பாட்டாளித் தேனீக்கள் எனப்படும் பெண் தேனீக்கள் என்று மூன்று வகையான தேனீக்களுக்கும் இந்தத் தேன் கூட்டில் தனித்தனி அறைகள் கட்டப்படுகின்றன.
மனிதன் என்ற அறிவியல் விலங்கு தான் பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும் கட்ட முடியும். வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, ஒப்பனை அறை என்று பல்வேறு அறைகளைக் கட்ட முடியும் என்று கற்பனை செய்து கொண்டிருக்கின்றான்.
ஆனால் அந்தக் கற்பனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டுத் தன்னிகரற்ற முறையில் தனி பாணியில் பொறியியல் கலை நுட்பத்துடன் கூடு கட்டி, தேனீக்கள் மனிதனை, மனித அறிவை விஞ்சி நிற்கின்றன.
இதனால் தான் மனிதனின் அறிவை விஞ்சுகின்ற தேனீக்களின் இந்தத் தொழில் நுட்பக் கலையை மனிதன் கண்டறியும் வகையில் திருக்குர்ஆனில் தேனீ என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் தேனீக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.
இது உண்மையில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றது. தேனீ கூடு கட்டும் விதம், அது கொண்டு வருகின்ற மகரந்தத் தூள், மொண்டு வருகின்ற தேன் மதுர இன்சுவை பானம், சிவப்பு நிறப் பிசின் போன்றவற்றைச் சேமிக்கும் பணியும் பாங்கும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதோடு அதிர்ச்சியிலும் உறைய வைக்கின்றது.
மனிதனைப் போன்று சுற்றுப் புறச் சூழலை அழித்து தனக்கு வீடு கட்டாமல், இந்தத் தேனீக்கள், தான் கட்டுகின்ற கூட்டிற்காகச் சேமித்து வரும் மகரந்தத் தூள் மூலம் தாவர இனத்தின் உருவாக்கமும், இனப் பெருக்கமும் நடைபெறுகின்றது.
தேனீக்கள் சுமந்து வருகின்ற மகரந்தத் தூள் பூக்களில் படியும் போது ஏற்படும் தாவர இனப் பெருக்கம் பற்றிய அறிவியல் ரகசிய வெளிப்பாட்டை அறியும் போது நம்முடைய ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!

அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!
ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!
இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!
ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!
உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!
ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!
எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!
ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!
ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!
ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!
ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்...
நம்மை நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது.

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பக்கதிர்கள் நம்மை தாக்க வரும்போது நிழல் தேடி அலைவது போல் நம் பாவங்களை கருக வைக்கும் தீப்பிழம்பாய் ரமழான் வருகிறது. அருள்மறையை அருளிய அருளாளனின் அன்பு மாதம் நம்மை அரவணைத்துச் செல்ல அண்மையில் வந்துகொண்டிருக்கிறது.
ஏக வல்லோன் அல்லாஹ்விடம் நெருங்க வைக்கும் மேலதிக வணக்க வழிபாடுகள் செய்ய வழிவகுக்கும் வரப்பிரசாதம் இந்த ரமழான்.
இறை நம்பிக்கைக் கொண்டோர் தம் உள்ளங்களால் எண்ணிய அனைத்து நற்செயல்களுக்கும் வழிதிறக்கும் அற்புத மாதம்.
இறைவனிடம் அருள் வேண்டும் முதல் பத்து தினங்களை உள்ளடக்கிய அருள் மாதம் அழகாக வருகின்றது.
பாவ மன்னிப்பு கோரும் நெஞ்சங்களில் பால்வார்க்கும் புண்ணிய மாதம் இரண்டாம் பத்து தினங்களுடன் புதையலாக வருகின்றது.
நரக நெருப்பின் விடுதலையை வேண்டி நிற்கும் நல்லோர்களின் நம்பிக்கை மாதம்,
சுவனத்தில் நுழைய துடிக்கும் சுந்தர நபிகளின் உம்மத்துகள் சுற்றும் சூழ காண துடிக்கும் சூப்பர் மாதம்
முத்தான மூன்றாம் பத்து தினங்களுடனே முன்னறிவிப்புடன் வருகின்றது.

உள்ளத்தால் அன்பை விதைத்து, உடலால் பணிவை வெளி கொணர்ந்து மக்களிடம் கருணையை அறுவடை செய்யும் காலம் ரமழான் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
ஆன்மீக பயிற்சிக்கு அடிகோலும் அற்புத வாய்ப்பை அள்ளி வழங்கிடும் மாதம்!
இறைவனின் வற்றாத கருணையான ரஹ்மத்தையும், ஊற்றுக்கண்ணாக விளங்கும் பரக்கத்தையும் ஒருசேர வாரி வழங்கிடும் வள்ளல் மாதம்.
செய்த குற்றங்கள் சிறியதாயினும், பெரியதாயினும் மன்னிப்பின் வாசல் திறக்கப்பட்டு பாவிகளுக்கு பாவமன்னிப்பு பகிர்ந்திடும் படைத்தவனின் மாதம்.
நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற நம்முடைய இருகரமேந்திய பிரார்த்தனை அவசியம், அப் பிரார்த்தனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உடனடியாக பதிலளிக்கப்படும் பண்புள்ள மாதம்.
நாம் படைக்கப்படுவதற்கு முன்னர், மனிதனையா படைக்கப் போகிறாய்? என்று ஆச்சரிய வினா தொடுத்த வானவர்கள் நம் செயல்களைக் கண்டு, வியந்து இறைவனிடம் பெருமை பாராட்டி பெருமிதப்படுத்தும் பேருள்ள மாதம்.
நம்மை வழிகெடுக்கும் நாசகார, தீய சக்திகளான ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு கொட்டிலில் அடைக்கப்படும் காருண்ய மாதம்.
இணையில்லா இறைவனின் எல்லையில்லா கூலி வழங்கப்படும் மாதம்.
நோன்பாளிகள் மட்டும்... என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டுள்ள உயர்தர சுவனத்தில் நாம் நோன்பாளி என்ற பெருமையுடன் நுழைய வைக்கும் மாதம்.
சுகந்த காற்று வீசும் வசந்த கால திறப்பு போல சுவனக்காற்றை வீச வானங்கள் மற்றும் சுவனங்களின் திறப்பு விழா நடைபெறும் விழாக்கா(கோ)லம்.
கோடைகால வெப்பத்தையே தாங்க முடியாத நமக்கு நரகத்தின் கொடுமையை தாங்க முடியுமா? அதற்கு முடிவுகட்டும் விதமாக முடிவில்லாத முன்னவன் அல்லாஹ்வின் முன்னேற்பாடு தான் இந்த ரமழான். ஆம்! இந்த வசந்த காலத்தில் நரகச்சூடு நம்மைத் தொட அனுமதியில்லை. எங்கும் எப்போதும் சுகம்! அதுதான் இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம்!! அதற்காகத்தான் இந்த மாதத்தில் மூடப்படும் நரகம்!!!
ஓராயிரம் இரவுகள் விழித்திருந்தால்தான் ஒருசில நன்மைகளை பெற முடியும் என்ற வாழ்க்கைச் சூழலில் ஓரிரவு விழித்திருந்தாலே போதும் ஓராயிரம் இரவுகள் செய்த செயல்களுக்குண்டான நன்மைகளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற சுபச் செய்தியுடன் லைல(த்)துல் கத்ர் என்ற புதையலை தன்னுள் வைத்திருக்கும் அருள் சுரங்கம்.
வாடிய பயிரை கண்டபோது வாடுவதை விட அதற்கு தண்ணீர் வார்ப்பது மேலான செயல் என்பது போல வறியோருக்கும், எளியோருக்கும், இல்லாதோருக்கும் வாரி வழங்கி கொடைத்தன்மையையும், வள்ளல் குணத்தையும் வாஞ்சையுடன் கற்றுத்தரும் வளமிகு மாதம்.
நாம் மட்டும் நன்மைகள் பல செய்து, தீமைகளை விட்டும் தவிர்ந்திருந்தால் போதுமா? பிறருக்கும் நல்லவற்றை போதிக்க வேண்டாமா? தீமையை விட்டும் தடுக்க வேண்டாமா? அந்தப் புனிதப் பணியை வழங்கும் பயிற்சிக்களம்தான் இந்த ரமழான்.
அடுத்தவருக்கு அநீதி இழைத்தல் ஆபத்தானது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும் அழகிய மாதம்.
பிறரின் தேவைகளை அறிந்து முடிந்தளவு உதவிகள் புரிய உள்ளத்தில் உதவிப்பண்பை ஊற்றெடுக்க வைக்கும் உன்னத மாதம்.
கஸ்தூரி மணம் கமழும் மணப்பொருளை விட நோன்பாளியின் வாய் வாடை வல்லோன் விரும்பும் வாசனை என்பதை வலியுறுத்தும் வசந்த மாதம்.
உலக காரியங்களில் போட்டியிட்டால் வெற்றியாளர் ஒருவரே! மற்ற அனைவரும் தோல்வியுற்றோர் என்பது நாம் அறிந்த நியதி. ஆனால், இம்மாதத்தில் நற்செயல்களில் போட்டியிடுவோர் அனைவரும் வெற்றியாளர்கள் என்பதும், தோல்வியில்லா வாழ்க்கையும், துவண்டு போகாத நிம்மதியும் கிடைக்கும் என்பதும் வெற்றியளிக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி என்பதை உணர்த்தும் மாதம்.
வழிபாடுகள் என்ற குறைவான மூலதனம். இறைபொருத்தம் மற்றும் சுவனம் என்ற இலாபம் மட்டுமே! வேறு எந்தவித நஷ்டமும் இல்லை என்ற புதுவித வியாபார உத்தியை கற்றுக்கொடுக்கும் கல்வி மாதம்.
இறுதியாக...
இறையச்சம் என்னும் தக்வாவை நம் உள்ளங்களில் உறையவைக்க உண்மையாளன் அல்லாஹ் உம்மி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்திற்கு வகுத்தளித்த செயல்முறை திட்டம்.
அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...?

இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து. நன்மைகளை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும். அதே அடிப்படையில் இரவு வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்விரண்டு செயற்பாடுகளும் நம்முடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
ஐவேளை தொழுகைகளையும் பள்ளிவாசலுக்கு சென்று கூட்டா(ஜமாஅத்தா)க நிறைவேற்ற வேண்டும். இது கூட்டு வாழ்க்கை முறையையும். சகோதர பாசத்தையும் பலப்படுத்த உதவி செய்யும்.
தினந்தோறும் திருக்குர்ஆனை உள்ளச்சத்துடன். பொருள் விளங்கி, ஓத வேண்டிய முறையில் ஓத வேண்டும். இது இறைவனின் கருணையும். மன நிம்மதியும் ஏற்பட வழிவகுக்கும்.
இஸ்லாமிய அறிவை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். இது ஈருலுக வெற்றிக்குண்டான பாதையை திறந்து வைக்கும்.
இரவு வணக்கம் என்ற தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளை அதிகமாக தொடர்ந்து தொழுது வர வேண்டும். இவை இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழிமுறையாகும்.
உறவுமுறையை பேணி வாழ வேண்டும். இது குடும்ப சீரமைப்பிற்கும். சொந்தங்கள் சேர்ந்து வாழ்வதற்கும் சீரான வழியை காட்டும்.
இல்லாருக்கும். எளியோருக்கும் முடிந்த வரை உதவிகள் புரிய வேண்டும். இது பிறர் மீது அன்பு செலுத்துதல் என்ற மேலான குணத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும்
அன்பின் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளே...! தயாராகுவோம் நாம்...!

இறைவழிபாட்டில் திளைத்திருப்போம்! இறைமறை குர்ஆனை ஓதுவதில் மூழ்கியிருப்போம்!
வீண் பேச்சுகளை தவிர்ந்திருப்போம்! வீணாணவைகளை விட்டும் ஒதுங்கியிருப்போம்!
பகல் முழுவதும் பசித்திருந்து நோன்பிருப்போம்! இரவு முழுவதும் விழித்திருந்து இறையைத் தொழுவோம்!
புனித ரமழானில் புதையலைத் தேடிப் புறப்படுவோம்! நாளை மறுமையில் பொன்னான வாழ்வை சென்றடைவோம்!
இங்கே நாள்தோறும் நன்மைகள் பல புரிவோம்! ஈருலகிலும் நாயன் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்!
அல்குர்ஆனின் வழிமுறையில் செல்வோம்! அல்லாஹ்வின் அளவிலா அருளைப் பெறுவோம்!
சுன்னத்தைப் பேணி சிறப்பாக வாழ்வோம்! சுகந்தரும் சுவனத்தில் சுதந்திரமாக நுழைவோம்!
உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்!

Wednesday, July 14, 2010

முஸ்லீம்களுக்கு அரசின் இலவச கல்வி உதவி-தவற விடாதீர்!

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .


இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது


1 - 10 வகுப்பு வரை


தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
* ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது

பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
* சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல் நகல் (xerox)
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )


சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10

புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26


கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
புதுப்பிக்கும் மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்



11, 12 , ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)


தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்

* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு

* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி


சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல்

* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10

புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26


கூடுதல் தகவல்கள் :

* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்

* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
ஏற்கனவே பயணித்த மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்



தொழிற்படிப்புகள் ( Engineering )


தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

* குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்

* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :

* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )
* IIT (சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்

* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்

* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை

* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்

* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி


சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல்

* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_ claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்


விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்
ஏற்கனவே பயணித்த மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்



மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் : http://www.tn. gov.in/bcmbcmw/ welfschemes_ minorities. htm

Sunday, June 20, 2010

"உறவினர்களை நேசித்தல்"

முதல் குத்பா

உறவைப் பேணுகிற விசயத்தில் சேர்ந்து வாழ வேண்டும் என்று கடமையாக்கியும் ஸலாமத்துடன் சுவனம் செல்லும் வழியை ஏற்படுத்திய அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக !

இதைக் கருத்தில் கொண்டு அருள்மரையில் அல்லாஹ் சொல்கிறான் "மேலும் அவர்கள் எத்தகையோர் என்றால், எதை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டானோ, அந்த இரத்த சொந்தத்தையையும் சேர்த்துக் கொள்வார்கள் (அதைத் துண்டித்து விடும் விஷயத்தில் தங்கள் இரட்சகனுக்கு பயந்தும் நடப்பார்கள். கேள்வி கணக்குகளின் கடுமைகளையும் பயந்து கொள்வார்கள்" ( 13:21 )

"மேலும், இரத்தக் கலப்பு சொந்தங்களையும் துண்டித்து விடுவதையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" (4:1) முஸ்லீம்களே! நிச்சயமாக உறவினர்களைப் பேணுவதில் மகத்துவமும் மாபெரும் கண்ணியமும் இருக்கும் நிலையில் உறவினர்களை நேசிக்கும் விதிகளில் அதிகமான கடமைகள் உள்ளன. ஏனென்றால், நிச்சயமாக, ரஹ்மான் & ரஹீம் என்ற வார்த்தையிலிருந்து அல்லாஹ்வின் பெயராக உருவாக்கப்பட்டுள்ளது.
இன்னும் அவர்களுடன் மென்மையாகவும் பாசத்துடனும் இரக்கத்துடனும் நல்ல உபகாரத்துடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களிப்பதுடன், கட்டாய கடமையாக்கியதுடன் அதிகமான பரக்கத்துகளும் வெற்றியும் ஈடேற்றமும் முழு நன்மையை பெற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இந்த உறவினர்களுடன் சேர்ந்து வாழும் அடியானுக்கு இறைவன் ஏற்படுத்துகிறான். எனவே, இவ்வாறு கடமையாக்கிய இறைவன் உறவினர்களை நேசிப்பது என்பது சொந்தக்காரர்கள், அதாவது சகோதர சகோதரிகள் மூலமாக, தாய் தந்தை வழி சொந்தங்கள், திருமண சொந்தம், மாமா மற்றும் மாமிமார்கள், சிறிய தகப்பனார், மற்றும் சாச்சிகள், கோத்திரத்தார்கள் மற்றும் குடும்பத்தார்கள் இவர்களை நேரில் சந்தித்து முக மலர்ச்சியோடு ஸலாம் உரைப்பதிலும் பொருள் உதவி செய்வதிலும் உபதேசிப்பதிலும் ஆலோசனை கூறும் விசயத்திலும் நல்ல வார்த்தைகளைப் பேசுவதிலும் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதிலும் மனக்கசடுகளைக் கலைவதிலும் இது போன்றவற்றில் ஈடுபடுவதில் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
உங்களை துண்டித்து நடந்தாலும், நீங்கள் அவர்களுடன் இணக்கமாக நடப்பதில்தான் வெற்றியும் உள்ளது. இதை வலியுறுத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய கூற்று சான்றாக அமைகிறது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "பதிலுக்குப் பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக, உறவு முறிந்தாலும், அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவர். (நூல்: புகாரி 5988)
அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரக்கத்தும் இறங்குவதற்கு காரணமாகவே உறவைப் பேணுவதின் நோக்கமாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உறவுகளைப் பேணக் கூடியவர்களாக உருவாக்க வேண்டும். நாம் உறவினர்களை சந்திப்பதற்கும் விசாரிப்பதற்கும் ஓர் அரணாகத் திகழ வேண்டும். தங்களுடைய கோத்திரங்களைப் பற்றியும், குடும்பத்தார்களின் விபரங்களையும் நமது தலைமுறையினர்களையும் அவர்களுக்கு (பிள்ளைகளுக்கு) தெரியப்படுத்த வேண்டும். இதற்கு முன் மாதிரியாகவே பெற்றோர்கள் திகழ வேண்டும். இதை உணர்த்தும் நபி (ஸல்) அவர்களின் கூற்று 'எந்த ஒன்றை உங்கள் உறவினர்களாக கருதுகிறீர்களோ அந்த குடும்பத்தார்களைப் பற்றியும், உறவினர்களையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்' இந்த நபி மொழிக்கு இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். தம் வாழ்வாதாரம் (ரிஜ்க்) விசாலமாக்கப்படுவதும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும், யாருக்கு அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும் (நூல்: புஹாரி 5985).
தம்பதியர்கள் தங்கள் சொந்தங்களில் பேணுதலாகவும் அவரவர் பெற்றோர்களை கண்ணியப்படுத்தக் கூடியவர்களுக்கு தங்களது ஆயுள்களிலும் பொருட்களிலும் எல்லா வகையான நன்மைகளையும் பரக்கத்துகளையும் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக இந்த உறவு நேசிப்பதில்தான் திகழ்கிறது. அதுபோல, நண்பர்கள் தங்களுக்குள் நட்பை வளர்ப்பதும் ஒருவருக்கொருவர் உபதேசிப்பதிலும் பொறுமையை கடைப்பிடிப்பதிலும் உறவுகளைப் பேணும் விசயத்தில் முழு ஆர்வம் கொள்வது அவசியமாகும். இந்த உறவை நிலைப் படுத்தும் நபி மொழிகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். ஸலாமை பரப்புங்கள், உணவுகளை உண்ணக் கொடுங்கள், உறவைப் பேணுங்கள், மக்கள் தூங்கும் (இரவில்) நிலையில் தொழுது கொள்ளுங்கள், இவ்வாறு நடந்து கொண்டால் நிம்மதியாக சுவர்க்கம் செல்வதற்கு வாய்ப்பாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: முஸ்னத் அஹ்மத் 22668).
அபு அய்யூபுல் அன்சாரி அவர்கள் கூறியதாவது 'ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் "இறைத்தூதர் அவர்களே! என்னை சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு நற் செயலை எனக்கு கூறுங்கள்" என்று அவசரமாக கேட்டார். அப்போது, மக்கள் "இவருக்கு என்ன நேர்ந்தது? இவருக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்" என்று மக்களை நோக்கி சொல்லிவிட்டு, அந்த மனிதரை நோக்கி "நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறிவிட்டு, "உம்முடைய வாகனத்தை (உம்முடைய வீடு நோக்கி) செலுத்துவீராக!" என்று கூறினார்கள். அம் மனிதர் (அப்போது) தன் வாகனத்தில் அமர்ந்தார் (நூல்: புஹாரி 5983).
உறவை முறிக்கும் பாவத்திற்க்காக தண்டனை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "உறவை முறித்து வாழ்பவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்" என ஜுபைர் இப்‌நுமுத்யிம் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5984).
அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்த போது, உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) உறவுகளை துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரியே இப்படி நிற்கிறேன். என்று கூறிய(மன்றாடிய)து. அல்லாஹ் "ஆம்! உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்லமுறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னை துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்கு திருப்தியளிக்கவில்லையா? என்று கேட்டான். அதற்கு உறவு "ஆம் (திருப்தியே) என் இறைவா" என்று கூறியது. அல்லாஹ் "இது உனக்காக நடக்கும்" என்று சொன்னான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் விரும்பினால் (நயவஞ்சகர்களே) நீங்கள் (போருக்கு வராமல்) பின் வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்து விடவும் முனைகிறீர்களா? எனும் திருக் குர்ஆன் (47:22)-வது வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள் என அபுஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 5987)
உறவு, ரஹீம் என்பது அளவில்லா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுகிறேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்" என்று கூறினான் என அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5988).
நபி (ஸல்) அவர்களுக்கு வஹியின் தாக்கத்தின் காரணமாக அன்னை கதீஜா நாயகி (ரலி) அவர்கள் ஆறுதல் சொல்லும்போது "அல்லாஹ்வின் ஆணையாக, அல்லாஹ் உங்களை கை விடவே மாட்டான். ஏனென்றால், நீங்கள் உறவினர்களை நேசிக்கிறீர்கள், சிரமத்தை சுமந்து கொள்கிறீர்கள், விருந்தாளிகளை உபசரிக்கிறீர்கள், எளியவர்களுக்கு உதவுகிறீர்கள்' என்று அன்னை கதீஜா நாயகி (ரலி) வாழ்த்தினார்கள் (நூல்: புஹாரி 3)
இரண்டாவது குத்பா
அடியார்களே! மேலே சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்திலும் ஒவ்வொரு மனிதனும் சொந்த பந்தங்களை (உறவை) பேணும் விசயத்தில் கவனமாகத் திகழ வேண்டும் என்றும், நோயாளிகளை சந்திப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக வாழ வேண்டும் என்பதையும் இந்த ஐக்கிய அரபு அமீரகம் உங்களுக்கு கட்டளையிடுகிறது. இதை உணர்த்தும் வசனமாக அல்லாஹ் அருள்மறையில் சொல்கிறான் "இன்னும் நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்" (5:2)


எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் நம் சொந்த பந்தங்களை நேசிக்கக் கூடியவர்களாக, அல்லாஹூம் அவனுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டவர்களாக ஆக்கித் தந்தருள்வானாக! ஆமீன்!!

மொழியாக்கம்: சுலைமான் ஆலிம் இமாம், ETA Ascon & Star Group - Dubai